காலை 9 மணி, பரபரப்பான சூழல் , முட்டி மோதி மூச்சு விடக்கூட முடியாத நிலையில் முதியவர்கள், புத்தகச் சுமையுடன் இடையில் பரிதவித்துக் கொண்டிருந்த பள்ளி சிறுவர்கள், கேலி கிண்டல்களுடன் கல்லூரி மாணவர்கள் என பேருந்து முழுவதும் சலசலப்புக்குக் குறைவில்லாத தருணம். நற்பேறு எமக்கும் கிடைத்ததோ, அமர இடம் கிடைத்தது பேருந்தில் எனக்கு இன்று. சற்றே என் பார்வையை உலவ விட்டேன் .
கண்ணெதிரே பெண்மையைத் தீண்டி , நிமிட நேர ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்த ஓர் இழிவுமிக்கவனின் செயல். பாவம் அப்பெண், சொல்ல மனமின்றி, மொழியுமின்றி , தத்தளித்துக் கொண்டிருந்தாள் பெண் பிறவியின் தாழ்வு எண்ணி .
ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் யாரேனும் இறங்குவாரா என்று அமர துடிக்கும் பள்ளிக் குழந்தைகளின் தவிப்பு மற்றொரு புறம் .
கல்லூரிக்குள் நுழையும் முன் தோழனைப் பார்த்து , கையசைத்து , கண்ணசைத்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருத்தியின் புன்னகையும் கூட அங்கு .
" கொஞ்சம் தள்ளி நின்னா குறைஞ்சா போய்டுவ , காலேஜ் புள்ளைகளைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களே?" என்ற கீரைக்கார அம்மாவின் கோப மொழி பாய்ந்தது அந்த இழிவாளனுக்கு. பின்னர் அப்பெண்ணைத் தன் மடியில் உட்கார வைத்து , ஒரு முறை முறைத்தாள் அவனை.
சற்றே அரை மணி நேரத்தில் பன்முக மாந்தர் கண்ணெதிரே என்று எண்ணி, மெல்ல தலை அசைந்தது எனக்கும், என் பேருந்து நிறுத்தத்தைக் கண்டவுடன் .

என் முதல் சிறுகதை !
பதிலளிநீக்கு